×

7 லிட்டர் பெட்ரோல், 50 பட்டாசுகள்.. ரூ.3000த்தில் வெடிகுண்டு : கேரள குண்டுவெடிப்பில் சரணடைந்தவர் திடுக்கிடும் தகவல்!!

திருவனந்தபுரம் : நாட்டையே உலுக்கிய கேரள குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ள நிலையில், சரணடைந்தவரின் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கொச்சி களமசேரியில் உள்ள கூட்டரங்கில் யெகோவா சாட்சிகள் பிரிவு கிறிஸ்துவர்களின் வழிபாட்டுக் கூட்டம் கடந்த 27ம் தேதி தொடங்கி 3வது நாளாக நேற்று நடைபெற்றது. 2000 பேர் கூடியிருந்த அரங்கின் மையப்பகுதியில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தன. இதில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 51 பேர் காயமடைந்தனர். குண்டு வெடிப்பு நிகழ்த்திய கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் திருச்சூர் போலீசில் சரணடைந்தார்.

சரணடைவதற்கு முன்னதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், வழிபாட்டு சபையின் நடவடிக்கைகள் பிடிக்காததால் குண்டு வைத்ததாக தெரிவித்து இருந்தார். மேலும் டொமினிக் மார்ட்டின் போலீசில் கொடுத்த செல்போனில் அவர் குண்டு வைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அவர் தனியாக தான் ஐஇடி வகை குண்டை இரண்டு இடங்களில் வைத்துள்ளார். அத்துடன் ஒரு பெட்ரேல் நிரப்பிய பாட்டிலையும் அருகில் வைத்துள்ளார். பின்னர் சிறிது தூரம் சென்று ரிமோட் மூலம் அதை வெடிக்க வைத்துள்ளார். இந்த காட்சிகள் பதிவாகியிருந்தது.

இந்த நிலையில், டிபன் பாக்ஸ் வெடிகுண்டை தயாரிக்க 7 லிட்டர் பெட்ரோல், பட்டாசு கடையில் வாங்கி சேமித்து வைத்து இருந்த 50 வெடிகளை பயன்படுத்தி யூடியூப் பார்த்து எலக்ட்ரிக் டெட்டனேடர்களை செய்துள்ளதாக மார்டின், இதற்கு ரூ.3000 செலவானதாக வாக்குமூலத்தில் தெரிவித்தார். மார்டினின் செல்போனில் இதற்கான சில வீடியோ ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். காலை 7 மணிக்கு நாற்காலிகளுக்கு இடையில் வெடிகுண்டுகளை வைத்து, 8.30 மணிக்கு பேட்டரிகளை ஆன் செய்து வெடிக்க வைத்ததாகவும் கூறியுள்ளார். குண்டு வெடிப்புக்கு பயன்படுத்திய ரிமோட் உள்ளிட்ட கருவிகளை அவரின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்த போலீசார், மார்டின் மனைவியிடமும் வாக்குமூலம் பெற்றனர். குண்டு வெடித்த மத வழிபாட்டு கூட்டத்தில் மார்டினின் மாமியாரும் கலந்துகொண்டுள்ளார். இது தெரிந்திருந்தும் தனது சதித்திட்டத்தில் இருந்து அவர் பின்வாங்கவில்லை.

The post 7 லிட்டர் பெட்ரோல், 50 பட்டாசுகள்.. ரூ.3000த்தில் வெடிகுண்டு : கேரள குண்டுவெடிப்பில் சரணடைந்தவர் திடுக்கிடும் தகவல்!! appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kerala ,
× RELATED திருவனந்தபுரம் அருகே சாலையில்...